
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.
கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்தது: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், இந்த முக்கியப் பாடங்களில் பெரும்பாலானோரின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். மேலும் எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், பெரும்பாலானோர் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
0 கருத்துரைகள்:
Post a Comment